துவாரம் வேங்கடசுவாமி நாயுடு

துவாரம் வேங்கடசுவாமி நாயுடு (Dwaram Venkataswamy Naidu) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞராவார்.

பிறப்பு: நவம்பர் 8, 1893
இறப்பு: நவம்பர் 25, 1964

பிறப்பும் இசைப் பயிற்சியும்

1893 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று பெங்களூரில் பிறந்தார். பின்னர் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். சிறு வயதில் கண்பார்வை குறைவாக இருந்தது. இதனால் பள்ளிக்கூடத்தில் இவரை ஏனைய மாணவர்களுடன் சமமாக நடத்தவில்லை எனத் தெரியவந்ததால் தந்தையார் இவரது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.

தந்தையார் ஓரளவு இசைஞானம் உள்ளவர். வயலினும் வாசிப்பார். இவரது தமையனார் வெங்கடகிருஷ்ணய்யா ஒரு வயலின் வித்துவான். வீட்டில் அடிக்கடி பஜனை நடக்கும். அப்போது வெங்கடசாமி நாயுடு பாடுவார்.

இவருக்கு வயலின் வாசிப்பதில் ஆர்வம் இருப்பதை அவதானித்த தமையனார், தாமே முதல் குருவாகி வயலின் கற்றுக்கொடுத்தார். தம்பி வயலின் வாசிப்பை மிக எளிதாக கற்றுக் கொள்வதைக் கண்ட வெங்கடகிருஷ்ணய்யா தம்பியை பல வித்துவான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார்.

வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்யநாத ஐயர் போன்றோரின் கச்சேரிகளைக் கேட்டு தன்னுடைய இசை அறிவை மேலும் கூர் தீட்டிக்கொண்டார்.

நண்பர்களின் இல்லங்களிலும் கோயில்களிலும் சிறு கச்சேரிகள் செய்தார். 1919-ல் விஜயநகரம் மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வில் இவருடைய வாசிப்பைக் கேட்ட கல்லூரி நிர்வாகத்தினர் இவரை கல்லூரியின் பேராசிரியராகவே நியமித்துவிட்டனர்.

1927-ல் இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி நடந்த இசை மாநாட்டில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 1

இசை நிகழ்ச்சிகள்

தமிழ் நாடு இசை வித்துவான்களாகிய காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், பல்லடம் சஞ்சீவ ராவ், முசிரி சுப்பிரமணிய ஐயர் போன்றோரின் இசைக் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.

அகில இந்திய வானொலி இசைக் கச்சேரிகளிலும் பங்கு பற்றினார்.

அத்துடன் இசைத்தட்டுகளும் வெளியானதால் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.2

கருநாடக இசையை அதன் பாரம்பரியத்துடனும் நவீன மாற்றங்களால் கெடாத தூய தன்மையுடனும் கையாண்டவர்

வேங்கடசுவாமி நாயுடு தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். தனியாகவோ அல்லது பக்கவாத்தியமாகவோ வாசிக்கும்போது அவரது வயலின் வாசிப்பு தனி முத்திரையுடன் விளங்கும்.3

வேங்கடசுவாமி நாயுடு வயலினில் முதன்முதலாக தனிக்கச்சேரி செய்தார். அவரது முதலாவது தனிக்கச்சேரி 1938 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்றது.4

ஒவ்வொரு இசை நிகழ்ச்சியின் முடிவிலும் வயலின் வில்லைக் கீழே வைத்துவிட்டு வாய்விட்டு, மனம்விட்டு நன்றாக சிரிப்பார். இது அவரின் தனித்துவமான ஒரு வழமை..5

இசை ஆசிரியராக

1936 ஆம் ஆண்டு விஜயநகரம் மகாராஜா கல்லூரியின் முதல்வரானார்.6

தனது மாணவர்களுடன் நண்பனாகவும், வழிகாட்டியாகவும் மட்டுமன்றி தத்துவ ஆசானாகவும் பழகுவார்.7

இசைப்பயிற்சியை ஒருநாள் கூடத் தவற விடக்கூடாது என மாணவர்களுக்கு சொல்லுவார். "ஒரு நாள் பயிற்சியை விட்டால் உங்கள் தவறுகளை நீங்கள் கவனிப்பீர்கள். இரண்டு நாட்கள் பயிற்சியை விட்டால் இரசிகர்கள் உங்கள் தவறுகளைக் கவனிப்பார்கள்" என மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுவார்..8

விருதுகளும் சிறப்புகளும்

சங்கீத கலாநிதி விருது, 1941 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது.
சங்கீத நாடக அகாதமி விருது, 1953 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி வழங்கியது.
பத்மஸ்ரீ விருது, 1957 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கியது.
ஆந்திரா பல்கலைக்கழகம் கலா ப்ரபூர்ண என்ற கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. இந்தப் பட்டம் பெற்ற முதலாவது இசைக் கலைஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது..9
இந்திய மக்களுக்கு வாணி (சரஸ்வதி)யின் கொடை இவர் என இராஜாஜி பாராட்டினார்.10
1993 ஆம் ஆண்டு இவரது பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது.11

இறப்பு

1964 ஆம் ஆண்டு ஆந்திர சங்கீத நாடக அகாதமி ஏற்பாடு செய்திருந்த விழாவுக்காக ஹைதராபாத் சென்றார். அப்போது மாரடைப்பால் காலமானார்.

மேற்கோள்கள்
1 முன்னோடிகள்
2 முன்னோடிகள்
3 Dwaram Venkataswamy Naidu (1893- 1964)
4 Dwaram Venkataswamy Naidu - Legend 6
5 Dwaram Venkataswamy Naidu - Legend 6
6 Professor Dwaram Venkataswami Naidu
7 Dwaram Venkataswamy Naidu - Legend 6
8 Dwaram Venkataswamy Naidu - Legend 6
9 Dwaram Venkataswamy Naidu - Legend 6
10 Dwaram Venkataswamy Naidu (1893- 1964)
11 India - Postage stamps (1852 - 2014)



No comments:

Post a Comment