ஆர். அனந்த கிருஷ்ண சர்மா

ரள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மா (Rallapalli Ananta Krishna Sharma) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞரும் தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பண்டிதரும் ஆவார்.
பிறப்பு: 23 ஜனவரி 1893
இறப்பு: 11 மார்ச் 1979

சிறு வயதில்


ஆந்திர மாநிலம் ராயல்சீமா, அனந்தப்பூர் மாவட்டம், கம்பதூர் வட்டத்தில் ரள்ளபல்லி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் கர்ணமடக்கல கிருஷ்ணமாச்சாரி. தாயார் பெயர் அலமேலு மங்கம்மா. தந்தையிடம் தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளும் தாயாரிடம் இசையும் கற்றார்.

தனது 13 ஆவது வயதில் மேற்படிப்புக்காக மைசூர் சென்று அங்கிருந்த பரக்கல மடத்தில் சேர்ந்தார். சமஸ்கிருத மொழியில் இவருக்கிருந்த புலமையைக் கண்ட மடத்தின் தலைவர் ஸ்ரீ கிருஷ்ண பிரமதந்திர சுவாமி இவரை அங்கிருந்த சாமராஜ பாடசாலையில் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழி இலக்கியங்களை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

அத்துடன் மைசூர் அரசவை வித்துவான்களாக இருந்த பிதரம் கிருஷ்ணப்பா, சிக்க ராமா ராவ் ஆகியோரிடம் கருநாடக இசை கற்றார்.

பயிற்சியின் முடிவில் வாய்ப்பாட்டு வித்துவானாகவும், வயலின் வாத்தியக் கலைஞராகவும் பேர் பெற்றவராக இருந்ததோடு வாக்கேயக்காரராகவும், விமரிசனம் செய்பவராகவும் விளங்கினார்.

பணிகள்


தனது 18 ஆவது வயதில் மைசூர் மகாராஜா கல்லூரியில் 1912 ஆம் ஆண்டு தெலுங்கு பண்டிதராக நியமனம் பெற்றார். 1949 வரை இந்தப் பதவியில் பணியாற்றியவர் திருப்பதிக்கு வந்து அங்கிருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கீழைத்தேய ஆய்வு மையத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக 1958 வரை பணியாற்றினார்.

மாணாக்கர்கள்


அவரது மருமகள் சரோஜம்மா (வாய்ப்பாட்டு, வீணை), டி. எஸ். தாதாச்சார், வி. வி. கிருஷ்ணமாச்சார், பணகிரி லட்சுமி நரசிம்மாச்சார், புக்கபட்டணம் ராமாச்சார் (வயலின்), அவரது மகள்கள் நாகமணி (வாய்ப்பாட்டு) பிரபாவதி (வாய்ப்பாட்டு, வீணை), ஹரிணி (வாய்ப்பாட்டு), அவரது மூத்த மகன் பேராசிரியர் ஆர். ஏ. பாணி சாயி (வாய்ப்பாட்டு), பேர்த்திகள் ஊர்மிளா (வீணை), சுரபி (வாய்ப்பாட்டு) ஆகியோர் அவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள்.

இசை, இலக்கியப் பணி


கருநாடக இசையிலும், தெலுங்கு, கன்னட, சமஸ்கிருத இலக்கியங்களிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

வாக்கேயக்காரராக


கீதம், ஸ்வரஜதி, வர்ணம், கிருதி, தில்லானா எனப் பல வடிவங்களில் அவர் பாடல்கள் இயற்றி இசை அமைத்துள்ளார். அன்னமாச்சாரியரின் கீர்த்தனைகளில் கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகளை தொகுத்து வெளியிட்டதுடன் அவற்றுள் சுமார் 100 கீர்த்தனங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

சிறப்புகளும் விருதுகளும்


  • கௌரவ முனைவர் பட்டம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் வழங்கியது (1974).
  • சங்கீத கலாநிதி விருது, சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது (1974).
  • கானகலா சிந்து - மைசூர் ஸ்ரீ பிரசன்ன சீதாராம மந்திரம், சங்கீத சம்மேளனம் வழங்கியது
  • கானகலா பிரபூர்ண - ஆந்திரப் பிரதேச சங்கீத நாடக அகாதமி வழங்கியது.
  • சங்கீத கலாரத்னா - பெங்களூர் காயன சமாஜம் (1970)
  • கௌரவ உறுப்பினர் - மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி
  • சங்கீத சாகித்திய ஆஸ்தான வித்துவான் - திருப்பதி திருமலை தேவஸ்தானம், திருப்பதி வழங்கியது.

மேற்கோள்கள்


No comments:

Post a Comment